ஆந்திரா, ஜார்க்கண்ட் உட்பட 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமனம் செய்தார். இவர்களில் 6 பேர் புதிதாக நியமிக்கப்பட்டனர். 7 ஆளுநர்கள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிர ஆளுநராக இருந்தபகத் சிங் கோஷ்யாரி தனது கருத்துகளால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். பகத்சிங் கோஷ்யாரி, கடந்த மாதம் பிரதமர் மோடியை சந்தித்து, ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். அவரது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்த ரமேஷ் பயஸ்,மகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் ஆளுநராக தமிழக பாஜக முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2 முறை பாஜகமக்களவை எம்.பி.யாக இருந்துள்ளார். தேசிய கயிறு வாரியத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் லஷ்மன் பிரசாத் ஆச்சார்யா, சிக்கிம் மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த மற்றொரு பாஜக மூத்த தலைவர் சிவ பிரதாப் சுக்லா, இமாச்சல பிரதேச ஆளுநராகவும், ராஜஸ்தானை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் குலாப் சந்த் கட்டாரியா, அசாம் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திரா ஆளுநராக இருந்த விஸ்வபூஷன் ஹரிசந்தன், சத்தீஸ்கர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் ஆளுநராக இருந்த அனுசுயா உய்க்கே, மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் ஆளுநராக இருந்த இல.கணேசன், நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
லடாக் துணைநிலை ஆளுநராக இருந்த ராதாகிருஷ்ணா மாத்தூரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார். அருணாசல பிரதேச ஆளுநராக இருந்த பிரிகேடியர் டாக்டர் பி.டி.மிஸ்ரா, லடாக் புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் கைவல்யத்ரிவிக்ரம் பர்நாயக், அருணாசலபிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இமாச்சல பிரதேச ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பிஹார் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பிஹார் ஆளுநராக இருந்த பாகு சவுகான், மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
0 Comments