தமிழ்நாட்டில் 1,04,347 கல்லூரி மாணவிகள் பயன்பெறும் வகையில், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 2ம் கட்டமாக கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் இந்து கல்லூரி மாணவிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
பெண் கல்வியை போற்றும் விதமாகவும், உயர் கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழ்நாட்டின் நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும் உருவாகிட கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை திமுக அரசு அறிமுகப்படுத்தியது.
அதன்படி 5.9.2022 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கும் 'புதுமைப் பெண்' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக தொடங்கப்பட்ட புதுமை பெண் திட்டத்தில் 1,16,342 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
0 Comments