ஆசிய தடகள சங்கம் சார்பில் ஆண்டுதோறும் ஜப்பானின் நோமி பகுதியில் ஆசிய ரேஸ் வாக்கிங் சாமியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வந்த இந்த தடகளப் போட்டி கொரோனா காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.
இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பானில் தற்போது நடத்தப்பட்டுள்ளது. இதில் இந்தியா சார்பில், ஆண்களுக்கான 20 கிமீ பிரிவில் அக்ஷ்தீப் சிங், சூரஜ் பன்வார், விகாஸ் சிங், பரம்ஜீத் சிங் பிஸ்ட், ஹர்தீப் சிங் ஆகியோரும், பெண்களுக்கான 20 கிமீ பிரிவில் பிரியங்கா கோஸ்வாமி, பாவ்னா ஜாட், சோனல் சுக்வால், முனிடா ப்ரஜாபதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதில், ஆண்களுக்கான 20 கிமீ பிரிவில் இந்தியாவின் சார்பில் அக்ஷ்தீப் சிங் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். பெண்களுக்கான 20 பிரிவில் கலந்து கொண்ட பிரியங்கா கோஸ்வாமி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இந்த தொடரில் தங்க பதக்கம் வென்ற அக்ஷ்தீப் சிங் ஏற்கனவே, 2024 பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார். ராஞ்சியில் நடைபெற்ற தேசிய ஓபன் ரேஸ் வாக் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற அவர் 20 கிலோமீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 19 நிமிடங்கள் 55 நொடிகளில் பந்தய தூரத்தை கடந்தார்.
இது தேசிய சாதனையாகவும் அமைந்துள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டு நடைபெற உள்ள உலக தடகள சாம்பியன்ஷிப்பிலும் பங்கேற்க அவர் தகுதி பெற்றுள்ளார்.
மேலும் இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி உலக் சாம்பியன்ஷிப் மற்றும் பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இவரைத் தொடர்ந்து, விகாஸ் சிங், பரம்ஜீத் சிங் பிஸ்ட் ஆகியோரும் உலக சாம்பியன்ஷீப் மற்றும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments