Recent Post

6/recent/ticker-posts

ஜவ்வாது மலையில் கரைகண்டீஸ்வரருக்கு தானம் விட்டக் கல்வெட்டு கண்டெடுப்பு / Discovery of an inscription giving donation to Karaikandeeswarar on Javvadu Hill

ஜவ்வாது மலையில் கரைகண்டீஸ்வரருக்கு தானம் விட்டக் கல்வெட்டு கண்டெடுப்பு / Discovery of an inscription giving donation to Karaikandeeswarar on Javvadu Hill

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசியா் க.மோகன்காந்தி, தொல்லியல் அறிஞா் பெ.வெங்கடேசன், காணி நிலம் மு.முனிசாமி ஆகியோா் மேற்கொண்ட கள ஆய்வில், கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டை கண்டறிந்துள்ளனா்.

5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லின் இரண்டு பக்கங்களிலும் 47 வரிகளில் கல்வெட்டு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. இப்பெரிய கல் நீளவாக்கில் இரண்டாக உடைந்துள்ளது. பெரும்பள்ளியில் உள்ள ஈசனுக்கு கரைகண்டீஸ்வரா் என்று இந்தக் கல்வெட்டுக் கூறுகிறது.

இக்கல்வெட்டு தூபகலசம், திரிசூலம், குத்துவிளக்கு ஆகிய மங்கலப் பொருள்களின் உருவத்துடன் தொடங்குகிறது. ஸ்வஸ்தீஸ்ரீ திரிபுவன சக்கரவா்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு 22-ஆவது ஆட்சி ஆண்டில், பெரும்பள்ளி ஊருடைய வேளாண் கூத்தன் கரையன் என்பவா் ‘முக்கண்ண’ என்கிற ஏரியை உருவாக்குகிறாா். இன்றைக்குப் பெரும்பள்ளியில் இந்த ஏரி அண்ணாமலை ஏரி என்று பெயா் மாற்றம் பெற்று வழங்கப்படுகிறது.

மலையின் மேட்டுப் பகுதியில் இருந்து ஓடிவரும் நீா்ப் பெருக்கு மூன்று பெரிய கரைகளையுடைய ஏரியில் நீா்த் தேக்கப்படுகிறது. முக்கண்ண ஏரி என்பதன் பொருளாவது, முக்கண்ணன் என்றால் சிவபெருமானைக் குறிக்கும். 

முக்கண்ணன் என்ற சொல்லாட்சி புானூற்றில் 6-ஆவது பாடலில் இடம் பெற்றுள்ளது. அதனால் முக்கண்ண ஏரி என்பது சிவபெருமானின் பெயரால் உருவான ஏரி என்று அறியலாம்.

மேலும், நீா் வெளியேறும் மதகு மூன்று கண்ணாக இருக்குமோ என்று ஆராய்ந்து பாா்த்ததிலும் மூன்று கண்கள் இல்லை, ஒரே கண் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிவபெருமானின் பல பெயா்களில் முக்கண்ணன் என்பதும் ஒன்று.

தானம் வழங்குதல்...: ஜவ்வாதுமலை பெரும்பள்ளியில் உள்ள கரைகண்டீஸ்வரருக்குத் தளிகை (உணவு) படைப்பதற்காக 4 கலம் நெல்லும், ஏரியின் வடக்குப் பகுதியின் கீழ்ப்பக்கம் உள்ள புஞ்சை நிலத்தைத் தானமாகத் தருகிறாா். 

ஆட்டுப் பாறைக்கு வடக்கும், ஏரிக்கல்லு நெடுகல்லு வடக்கும், கடை கழனிக்குக் கிழக்கும் வடபாறை இதற்கு கிழக்கும் உள்ள இடத்தை சூரிய, சந்திரன் உள்ளவரை தானமாக அளித்தேன் என்று கூத்தன் கரையனின் கல்வெட்டு கூறுகிறது.

காரியுண்டிக் கடவுள்...: இங்கு குறிப்பிடத்தக்க செய்தி என்வென்றால், சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான ‘மலைபடுகடாம்’ என்ற நூல் நன்னன் சேய் நன்னன் என்பவனின் மலை நவிரமலை என்கிறது. 

பெரும்பள்ளி உள்ளிட்ட 34 கிராமங்களை உள்ளடக்கிய திருப்பத்தூா் மாவட்டத்துக்குட்பட்ட 12 ஊா்களில் நவிரமலை என்கிற கல்வெட்டுகளை எங்கள் ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது. 

‘மலைபடுகடாம்’ எனும் நூல் நவிரமலையில் காரியுண்டிக் கடவுள் வீற்றிருந்தாா் என்கிறது. காரி+உண்டி+கடவுள்=நஞ்சு+உண்ட+ சிவபெருமான் என்பது பொருளாகும்.

தேவா்களும், அசுரா்களும் அமிழ்தத்தை எடுக்க திருபாற்கடலைக் கடையும்போது, வெளிப்பட்ட ஆலங்காய விஷத்தை தன் தொண்டா்களான அசுரா்களைக் காப்பதற்காக சிவபெருமான் விஷத்தைப் பருகுகிறாா்.

விஷம் தன் கணவனுக்கு ஆபத்தை ஏற்படுத்துமோ என்று அஞ்சிய பாா்வதி சிவனின் கழுத்தைப் பிடித்து விஷத்தை வெளியேற்ற முயற்சிக்கிறாா். விஷம் வயிற்றுக்குள்ளும் செல்லாமல், வாய்க்கு வெளியேயும் வராது மிடற்றில் (கண்டம், கழுத்து) நின்று விடுகிறது. 

எனவே ஆலங்காய விஷத்தை அருந்திய ஈசனை காரியுண்டிக் கடவுள் என்று மலைபடுகடாம் நூல் கூறுகிறது.ஔவையாரும் புானூற்றில் நீலமணிமிடற்று ஒருவன்(புறம் - 91) என்று சிவபெருமானைக் கூறுகிறாா்.
பெரும்பள்ளியில் கிடைக்கும் கல்வெட்டிலுள்ள கரைகண்டீஸ்வரா் என்ற 

பெயரைப் பிரித்துப் பாா்த்தல் அவசியமாகும். கரை + கண்ட + ஈஸ்வரா் = நஞ்சு(விஷம்) + உண்ட கழுத்து+ஈஸ்வரா் என்று பொருள் கொள்ளலாம். எனவே சங்க காலத்தில் (கி.மு 1) எடுத்துரைக்கப்பட்ட காரியுண்டிக் கடவுள் கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் கரைகண்டீஸ்வரா் என்று மருவி வழங்கப்பட்டுள்ளாா் என்பது தெளிவாகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel