தொடர்ந்து 7வது முறையாக குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு / Short-term lending rate unchanged for 7th consecutive time - RBI announcement

ரிசர்வ் வங்கி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நிதிக் கொள்கை மறு சீராய்வு அறிக்கையை வெளியிடுகிறது. இதன்படி நடப்பு மாதத்துக்கான கூட்டம் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. எனவே ரெப்போ விகிதம் 6.5% ஆகவே தொடரும். தொடர்ந்து 7வது முறையாக இது மாற்றம் செய்யப்படவில்லை.

பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தீவிர கவனம் செலுத்தி வருவதால், ரெப்போ விகிதத்தை மாற்றவில்லை. முக்கிய கடன் விகிதங்களிலும் மாற்றமில்லை.

பண வீக்கத்தை 4 சதவீதம் என்ற இலக்கிற்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இருப்பினும் நடப்பு நிதியாண்டுக்கான பண வீக்கம் 4.5 சதவீதமாக இருக்கும். நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என தெரிவித்துள்ளது.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யாததால் வீட்டுக்கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமுமின்றி பழைய நிலையே நீடிக்கும். மக்களவைத் தேர்தல் காரணமாக ரெப்போ விகிதம் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.