இந்திய பேட்மிண்டன் வீரர் நிதேஷ் குமார் தங்கம் வென்றார் / Indian badminton player Nitesh Kumar won gold

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17-வது பாராலிம்பிக் தொடர் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் செப்.8ஆம் தேதி வரை என மொத்தம் 11 நாட்கள் நடைபெறுகின்றன. பாராலிம்பிக்ஸில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்நிலையில், பாராலிம்பிக்ஸ் ஆடவர் பேட்மிண்டன் போட்டியின் SL3 பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நிதேஷ் குமார், கிரேட் பிரிட்டனை சேர்ந்த டேனியல் பெத்தல் என்பவரை எதிர்கொண்டார்.

ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடி வந்த நிதேஷ் குமார், தொடக்க செட்டை 21-க்கு 14 என்ற கணக்கில் கைப்பற்றினார். இறுதியில் இந்திய வீரர் நிதேஷ் 23-க்கு 21 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் பாரீஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கப் பதக்கம் கிடைத்தது.

இந்திய அணி 2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களுடன் ஒட்டுமொத்த பதக்க பட்டியலில் 22வது இடத்திற்கு முன்னேறியது. முன்னதாக இந்திய அணி 30வது இடத்தில் இருந்த நிலையில், நிதேஷ் குமாரின் தங்கப் பதக்கத்தின் மூலம் பட்டியலில் 8 இடங்கள் முன்னேறி தற்போது 22வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.