மாநிலங்களுக்கு ரூ.1.73 லட்சம் கோடி வரி பங்கு விடுவிப்பு / Rs 1.73 lakh crore tax share released to states

மத்திய அரசின் தொகுப்பிலிருந்து கிடைக்கும் வரியிலிருந்து மாநில அரசுகளுக்கான தேவைகள், மாநிலங்கள் அதனை எந்தெந்த தேவைகளுக்கு செலவிடப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் கலந்தாலோசித்து நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த வரி பகிர்வு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மாநிலங்கள் மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்துவதற்கும், அவர்களின் வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கும் இந்த மாதம் அதிக தொகை ஒதுக்கப்படுகிறது என்று நிதியமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ரூ.1,73,030 கோடியை மாநில அரசுகளுக்கு ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், இதே டிசம்பர் மாதம் 2024ஆம் ஆண்டு மத்திய அரசு ஒதுக்கிய தொகை 89,086 கோடி என்றும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது, மத்திய அரசு வசூலிக்கும் வரியில் 41 சதவீதத்தை, மாநில அரசுகளுக்கு தவணை முறையில் பகிர்ந்தளித்து வருகிறது.

அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.31,039.84 கோடியும் பிகாருக்கு ரூ.17,403 கோடியும் மத்திய பிரதேசத்துக்கும் மேற்கு வங்கத்துக்கும் தலா ரூ.13 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடியும் கர்நாடகத்துக்கு ரூ.6,310 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.