பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (26 நவம்பர் 2025) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.7280 கோடி நிதி ஒதுக்கீட்டில் 'அடர்த்தியாக்கப்பட்ட அரிய புவி நிரந்தர காந்தங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு' ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தியாவில் ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் ஒருங்கிணைந்த அரிய புவி நிரந்தர காந்த (ஆர்இபிஎம்) உற்பத்தியை நிறுவுவதை இந்த முதல்முறை முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் தற்சார்பை மேம்படுத்தி, உலகளாவிய ஆர்இபிஎம் சந்தையில் முக்கியப் பங்கு வகிக்கும் நாடாக நிலைநிறுத்த முடியும்.
இந்தத் திட்டத்தின் மொத்த நிதிச் செலவான ரூ.7280 கோடியில், ஐந்து ஆண்டுகளுக்கு ஆர்இபிஎம் விற்பனை சார்ந்த ரூ.6,450 கோடி ஊக்கத்தொகைகளும், ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் அளவுக்கு ஆர்இபிஎம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை அமைப்பதற்காக ரூ.750 கோடி மூலதன மானியமும் அடங்கும்.
இந்தத் திட்டத்தின் மொத்தக் காலம் அனுமதி வழங்கப்பட்ட நாளிலிருந்து 7 ஆண்டுகள் ஆகும். இதில் ஒருங்கிணைந்த ஆர்இபிஎம் உற்பத்தி நிறுவனத்தை அமைப்பதற்கான 2 ஆண்டு காலமும், ஆர்இபிஎம் விற்பனைக்கான ஊக்கத்தொகை வழங்கலுக்கான 5 ஆண்டுகளும் அடங்கும்.


0 Comments