எலக்ட்ரிக் பஸ், ஸ்கூட்டர் உற்பத்திக்கு தமிழக அரசுடன் வின்பாஸ்ட் புரிந்துணர்வு ஒப்பந்தம் / Winfast signs MoU with Tamil Nadu government for production of electric buses and scooters

உலகின் முன்னணி எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி செய்ய கடந்த ஆண்டு நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தம் செய்திருந்தது.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி சில்லாதத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்தது. இங்கு அமைக்கப்பட்டுள்ள ஆலையில் வின்பாஸ்ட் விஎப்6 மற்றும் விஎப்7 கார்களை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

இந்நிலையில், இந்த ஆலையை மேலும் விரிவுபடுத்தி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் எலக்ட்ரிக் பஸ்கள் தயாரிக்க முடிவு செய்திருந்தது. வியட்நாம் தலைநகர் ஹனாயில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசுடன் கையெழுத்தாகியுள்ளது. 

விரிவாக்கத்துக்காக ஏற்கெனவே உள்ள ஆலையை ஒட்டி 500 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்து, மின் இணைப்பு, தண்ணீர் வசதி, சாலை வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளுக்கான அனுமதிகளையும் வழங்கும். மேற்கண்ட ஆலை விரிவாக்கத்துக்காக ரூ.4,498 கோடியை வின்பாஸ்ட் முதலீடு செய்கிறது.