அசாமில் தேசிய நெடுஞ்சாலை 15-ல் 135.871 கிலோ மீட்டர் தொலைவிலான நான்கு வழித் தடங்களைக் கொண்ட குவகாத்தி-தேஜ்பூர் வழித்தடத்தை மேம்படுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்தது.
இத்திட்டம் ரூ 8,970.20 கோடி மொத்த மூலதன செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய விமானப்படையுடன் இணைந்து தேஜ்பூர் புறவழிச் சாலையில் அவசரகாலத் தரையிறங்கும் வசதி (4.9 கிமீ) அமைக்கப்பட உள்ளது.
இது பிரம்மபுத்திரா ஆற்றின் தெற்குப் பகுதியில் உள்ள என்எச்27 (கிழக்கு-மேற்கு வழித்தடம்) சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும்.
இத்திட்டத்தில் 58.7 கிமீ தொலைவிற்கு ஐந்து பெரிய புறவழிச்சாலைகள் அமைப்பதும் அடங்கும். இதன் காரணமாக, பைஹாடா சரியாலி, சிபஜார், கருபேடியா, தேக்கியாஜூலி, தேஜ்பூர் போன்ற மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகள் வழியாகச் செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
அத்துடன், 15 பெரிய பாலங்கள், 30 சிறிய பாலங்கள், 19 மேம்பாலங்கள், 1 யானை கடந்து செல்லும் பாதை (தேஜ்பூர் புறவழிச்சாலையில்) ஆகியவை அமைக்கப்பட உள்ளன.


0 Comments