ஐசிசி -யின் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது இங்கிலாந்து அணியின் டி20 கேப்டன் ஜாஸ் பட்லருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று மகளிர் பிரிவில் பாகிஸ்தானின் சித்ரா அமீன் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் அயர்லாந்து அணியை பாகிஸ்தான் அணி வென்றது.
இதற்கு சித்ரா அமீன் முக்கிய காரணமாக அமைந்தார். இதேபோன்று 20 ஓவர் உலக கோப்பையை இங்கிலாந்து அணி கைப்பற்றுவதற்கு ஜாஸ் பட்லர் ஒரு முக்கிய காரணம்.
இதன் அடிப்படையில் இந்த இருவரும் நவம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனைக்கான விருதை பெறுகின்றனர்.
நவம்பர் மாத தொடக்கத்தின்போது, 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய ஜாஸ் பட்லர், நியூசிலாந்து அணிக்கு எதிராக 47 பந்துகளை மட்டுமே சந்தித்து 73 ரன்களை அதிரடியாக குவித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
இதேபோன்று இந்தியாவிற்கு எதிரான அரையிறுதி போட்டியில் 49 பந்துகளை சந்தித்து 80 ரன்களை அதிரடியாக சேர்த்த ஜாஸ் பட்லர் அணி வெற்றி பெறுவதற்கு காரணமாக அமைந்தார்.
இந்த போட்டியில் பட்லரும் அலெக்ஸ் ஹேல்ஸும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 170 ரன்கள் சேர்த்தனர். இந்த போட்டியில் விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 26 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
0 Comments