இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் மற்றும் ஆஸ்திரேலியாவின் வர்த்தகம் மற்றும் சுற்றுலா அமைச்சர் செனட்டர் ஹான் டான் ஃபாரல் ஆகியோர் நேற்று சந்தித்து இருதரப்பு பொருளாதார உறவை மேலும் மேம்படுத்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை (ECTA) செயல்படுத்துவது, இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை (CECA) மேம்படுத்துவது மற்றும் இரு நாடுகளிலும் முதலீட்டை மேலும் மேம்படுத்துவது குறித்து அமைச்சர்கள் விவாதித்தனர்.
ஜி-20, இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு (IPEF) மற்றும் உலக வர்த்தக அமைப்பு (WTO) ஆகியவற்றில் ஈடுபடுவது குறித்தும் அமைச்சர்கள் விவாதித்தனர்.
இரு நாடுகளும் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்காக செயல்படுவதால், எரிசக்தி மாற்றத்தின் முக்கியத்துவத்தை அமைச்சர்கள் எடுத்துரைத்தனர்.
மேலும், பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைய பொருளாதாரம், தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ரீதியான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த உறுதிபூண்டனர்.
இந்தியாவின் ஜி-20 தலைமைக்கு ஆஸ்திரேலியா வலுவான ஆதரவை அளிக்குமென அமைச்சர் ஃபாரெல் மீண்டும் உறுதியளித்தார்.
நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான செயல்களை விரைவுபடுத்துவது உட்பட, வலுவான, நிலையான மற்றும் அனைவரும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான பாதையை உலகிற்கு கொண்டு வர ஜி-20 உதவ வேண்டும் என்று அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.
ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் முக்கியமான வர்த்தகக் கூட்டாளிகள் என்பதை அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர். இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இருதரப்பு வர்த்தகம் கடந்த நிதியாண்டில் 31 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் கணிசமாக மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
0 Comments