முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த ஆளுநருக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம் / Implementation of the resolution brought by Chief Minister M. K. Stalin against the Governor
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனி தீர்மானத்தை கொண்டுவந்தார்.
ஆளுநருக்கு அறிவுறுத்தும் வகையிலும் ஆளுநர் செயல்பாடு குறித்து விவாதிக்கவும் ஒரு தீர்மானத்தை கொண்டுவரவேண்டுமானால் பேரவை விதிகளில் சில விலக்குகளை (தளர்வு) கொண்டுவரவேண்டும்.
அதன்படி பேரவை முன்னவர் துரைமுருகன் நேற்று ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். அதில், சட்டப் பேரவை விதி 92(7)ல் அடங்கியுள்ள 'ஆளுநரின் நடத்தை குறித்து' என்ற சொற்றொடர், விவாதத்தில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் ஆளுநரின் பெயரை பயன்படுத்துவது என்ற சொற்றொடர் மற்றும் விதி 287-ல் அடங்கிய 92(7) ஆகியவற்றின் பயன்பாடுகளை நிறுத்தி வைத்து அரசினர் தனித்தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி தீர்மானத்தை முன்மொழிந்தார்.
அந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமானால் பேரவை உறுப்பினர்களில் நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்கள் அதற்கு ஆதரவு தரவேண்டும்.
அதன்பின்னர் இந்த தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டது. தீர்மானத்தை நிறைவேற்ற எண்ணிக்கை முறையை சபாநாயகர் அப்பாவு கொண்டுவந்தார்.
பேரவையில் மொத்தம் 146 உறுப்பினர்கள் இருந்தனர். அதில், 144 பேர் தீர்மானத்தை ஆதரித்தனர். பாஜ எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் மட்டும் எதிர்த்தனர். தீர்மானத்தின் மீது யாரும் நடுநிலை வகிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநரின் செயல்பாடு குறித்து விவாதிக்கும் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.
இதையடுத்து, இந்த தீர்மானத்தின் மீது அவை முன்னவர் துரைமுருகன், செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), நாகை மாலி (மார்க்சிஸ்ட்), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), சதன் திருமலைக்குமார் (மதிமுக), சிந்தனை செல்வன் (வி.சி.க), ஜவஹீருல்லா (மமக), ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக) ஆகியோர் ஆதரவு தெரிவித்து பேசினர். இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
0 Comments