2025-ம் ஆண்டுக்கான நார்வே செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வந்தது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் வீரர் குகேஷ், அர்ஜுன் எரிகைசி 5 முறை உலக சாம்பியனான நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஒவ்வொருவரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோதினர். இன்று இறுதி சுற்று போட்டி நடந்தது. இதில் கார்ல்சன், இந்தியாவின் அர்ஜூன் எரிகைசியை எதிர்கொண்டார்.
இந்த போட்டி டிராவில் முடிந்தது. 10 போட்டியின் முடிவில் கார்ல்சன் 3 வெற்றி, ஒரு தோல்வி (குகேசுடன்) 6 டிரா என 16 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்து 7வது முறையாக நார்வே செஸ் பட்டம் வென்றார்.
குகேஷ் கடைசி போட்டியில், அமெரிக்காவின் பாபியானோ கரவுனாவிடம் தோல்வி அடைந்தார். இதனால் குகேஷ் 14.5 புள்ளிகளுடன் (4 வெற்றி, 4 தோல்வி, 2 டிரா) 3வது இடத்தை பிடித்தார்.
கரவுனா 15.5 புள்ளிகளுடன் 2வது இடத்தையும், மற்றொரு இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி 13 புள்ளிகளுடன் (2 வெற்றி, 3 தோல்வி, 5 டிரா) 5வது இடத்தையும் பிடித்தனர். அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா (14) 4வது இடத்தையும், சீனாவின் வெய் யி (9.5 புள்ளி) கடைசி இடம் பிடித்தார்.
மகளிர் பிரிவில் உக்ரைனின் அன்னா முசிச்சுக் 16.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றார். சீனாவின் லீ டிங்ஜி (16) 2வது இடத்தையும், இந்தியாவைச் சேர்ந்த கோனேரு ஹம்பி (15புள்ளி) 3வது இடத்தையும், வைஷாலி (11) 5வது இடத்தையும் பிடித்தனர்.
0 Comments