உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'ருத்ராஷ்ட்ரா' என்ற ட்ரோனை இந்திய ராணுவம் நேற்று வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. இந்த ட்ரோனால் செங்குத்தாக மேலெழும்பி பறந்து சென்று, இலக்கை நெருங்கியதும் செங்குத்தாக தரையிறங்கி துல்லிய தாக்குதல் நடத்த முடியும்.
'ருத்ராஷ்ட்ரா' என்ற ட்ரோனை சோலார் ஏரோஸ்பேஸ் அண்ட் டிபன்ஸ் லிமிடெட்(எஸ்டிஏஎல்) நிறுவனம் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயார் செய்தது. இது செங்குத்தாக மேலெழும்பி மற்றும் தரையிறங்கும் திறன் படைத்தது.
இந்த ஏவுகணை போக்ரானில் கள பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்தது. பரிசோதனையில் 50 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தகர்த்தது. இலக்கு தூரத்தை அதிகரித்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளும் வெற்றிகரமாக முடிந்தன.
ருத்ராஷ்ட்ரா ட்ரோனால் 1.5 மணி நேரம் பறந்து சென்று 170 கி.மீ இலக்கை தாக்க முடியும். இந்த ட்ரோனால் தன்னிச்சையாக செயல்பட்டு தாக்குதல் நடத்தியபின் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வர முடியும். அதோடு இதில் உள்ள கேமிரா மூலம் தாக்குதல் காட்சிகளை நேரடியாக காணலாம்.
மேக் இன் இந்தியா திட்டத்தால், தயாரிக்கப்பட்ட இந்த ட்ரோனால், எதிரி நாட்டுக்குள் 100 கி.மீ தூரம் சென்று இலக்குகள் மற்றும் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த முடியும்.
இந்த பரிசோதனையை பார்வையிட ட்ரோன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கபட்டிருந்தது. இது அவர்களுக்கு ஊக்குவிப்பாகவும், புதுமையை கண்டுபிடிக்கவும் உதவும். இதன் மூலம் ட்ரோன்களுக்கு வெளிநாடுகளை சார்ந்திருப்பது குறையும்.
நவீனகால போர் முறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன்கள் முக்கிய பங்கு வகிப்பதால், அதி நவீன ட்ரோன்களை தயாரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் டரோன் தயாரிப்பு மற்றும் பரிசோதனைகளுக்கு இந்திய ராணுவம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
0 Comments