நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளுக்கு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 8.45 மணிக்கு சென்னை கோட்டை கொத்தளத்திற்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இந்த அணிவகுப்பில் சிறப்பு காவல் படைகள், கேரளா சிறப்பு காவல்படை, காவல் பெண் கமாண்டோக்கள் உள்ளிட்ட போலீசார் பங்கேற்கின்றனர்.
தொடர்ந்து, கோட்டை கொத்தளத்தில் காலை 9 மணிக்கு மூவர்ண தேசியக்கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்து உரையாற்றிவருகிறார்.
இந்த வீர விடுதலைத் திருநாளிலும் ஒன்பது முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். மாநில அரசு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கிவரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
மாநில அரசு விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கிவரும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
வீரபாண்டிய கட்டபொம்மன் வழித்தோன்றல்கள், முன்னாள் ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியின் வழித்தோன்றல்கள், சிவகங்கை மருது சகோதரர்கள் வழித்தோன்றல்கள் மற்றும் வ.உ.சிதம்பரனார் வழித்தோன்றல் பெற்றுவரும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.11 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி ரூ. 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் வசதிக்காக சென்னை, மாதவரத்தில் 33 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் உள்கட்டமைப்புடன் கூடிய முன்னாள் படை வீரர்கள் தங்கும் விடுதி ரூ.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் ஒரு பயிற்சி மையம், மண்டல அளவில் இரண்டு பயிற்சி மையங்கள் மற்றும் மாவட்டத்திற்கு ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஆகியவை தொடங்கப்படும்.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில், பதிவுபெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள் கல்லூரியில் ும்போது, திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பு பெற, நவீன தொழில்நுட்பங்களில் பத்தாயிரம் மாணவர்களுக்கு ரூ.15 கோடி செலவில் இணைய வழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். மேற்சொன்ன ஒன்பது அறிவிப்புகளும் விரைவில் செயல்படுத்தப்படும்.
0 Comments