டிட்வா (Ditwah) புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக, 450 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ₹3,700 கோடி) மதிப்பிலான விரிவான நிதியுதவித் திட்டத்தை இந்தியா முன்மொழிந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புத் தூதராக இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், செவ்வாய்க்கிழமை கொழும்பில் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
புயல் தாக்கிய உடனே, இந்தியா 'ஆபரேஷன் சாகர் பந்து' (Operation Sagar Bandhu) என்ற பெயரில் துரித கதியில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டது. இதன் மூலம் சுமார் 1,100 டன் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
14.5 டன் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர கால மருத்துவ சேவைகளை வழங்க இந்தியக் குழுவினர் முன்னின்றார்கள்.
தற்போது அவசர நிவாரணப் பணிகள் நிறைவடைந்த நிலையில், நாட்டின் உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப இந்தியா இந்த பெரும் தொகையை வழங்குகிறது.
இந்த 450 மில்லியன் டாலர் தொகுப்பு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சலுகை அடிப்படையிலான கடன் உதவிக்கு 350 மில்லியன் டாலரும் நேரடி மானியமாக 100 மில்லியன் டாலரும் வழங்கப்படுகிறது.


0 Comments