கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
கடந்த 2005ல் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் மத்திய அரசின் மிக முக்கியமான திட்டமாக இருந்து வருகிறது. இந்தச் சூழலில் தான் இந்தத் திட்டத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
நாடாளுமன்றத்தில் இப்போது குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்குப் பதிலாக விக்க்சித் பாரத்- ரோஸ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) அதாவது விபி-ஜி ராம் ஜி என்ற திட்டத்தைக் கொண்டு வர மசோதாவை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், இதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மகாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். காந்தியின் பெயரை நீக்கவே மத்திய அரசு இதைச் செய்வதாகக் காங்கிரஸ் விமர்சித்தது.
மேலும், இது மாநிலங்களின் நிதிச் சுமையை அதிகரிக்கும் என்றும் பல்வேறு எதிர்க்கட்சி எம்பிகள் விமர்சித்தனர். அதாவது 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் செலவுகளை மத்திய அரசே ஏற்கும்.
ஆனால், இந்த திட்டத்தில் 60%ஐ மத்திய அரசு கொடுக்கும் நிலையில், 40% மாநில அரசு கொடுக்க வேண்டும். இதற்கும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.
இருப்பினும், இந்த மசோதா லோக்சபாவில் வியாழக்கிழமை பிற்பகல் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து ராஜ்யசபாவிலும் வியாழன் மாலை தொடங்கி இரவு வரை விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவைக் கடுமையாக எதிர்த்தனர்.
ஜி ராம்ஜி மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக்குழு விவாதத்திற்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இருப்பினும், இது ராஜ்யசபாவில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து எதிர்க்கட்சியினரின் கடும் அமளிக்கு மத்தியில் இந்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.


0 Comments