நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் கடந்த மார்ச் மாதம் இந்தியாவுக்கு வருகை தந்தபோது, இந்த ஒப்பந்தம் குறித்து பேச்சு ஆரம்பமானது. பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்து இரு நாட்டுப் பிரதமர்களும் திங்கள்கிழமை (டிச. 22) தொலைபேசி வழியாக உரையாடினர். இந்த உரையாடலைத் தொடர்ந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியானது.
அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்த ஒப்பந்தம் அமலாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றிலிருந்து, நியூஸிலாந்துக்கான இந்திய ஏற்றுமதிகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால், நியூஸிலாந்தில் இந்தியப் பொருள்களின் விலை கணிசமாகக் குறையும் என்பதால் நுகர்வோரிடம் இந்தியப் பொருள்களுக்கான பயன்பாடு அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தால், வர்த்தகம், முதலீடு, புத்தாக்கம் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர வாய்ப்புகள் ஆகியவை ஊக்குவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக, பல்வேறு துறைகளில் புத்தாக்கவியலாளர்கள், தொழில்முனைவோர்கள், விவசாயிகள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் இளையோருக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments