பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், தில்லி மெட்ரோவின் 16.076 கி.மீ. நீளமுள்ள ஐந்தாம் கட்ட (ஏ) திட்டத்தின் ஒரு பகுதியாக மூன்று புதிய வழித்தடங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அவை: 1. ஆர்.கே. ஆசிரம மார்க் முதல் இந்திரபிரஸ்தா வரை (9.913 கி.மீ.), 2. ஏரோசிட்டி முதல் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் முனையம்-1 வரை (2.263 கி.மீ.) 3. துக்ளகாபாத் முதல் காலிந்தி கஞ்ச் வரை (3.9 கி.மீ.).
இந்தத் திட்டம் தேசியத் தலைநகருக்குள் இணைப்பை மேலும் மேம்படுத்தும். தில்லி மெட்ரோவின் ஐந்தாம் கட்ட (ஏ) திட்டத்தின் மொத்த திட்டச் செலவு ரூ.12014.91 கோடி ஆகும்.
இதற்கான நிதி மத்திய அரசு, தில்லி அரசு மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்படும். இந்த வழித்தடம் அனைத்து கடமைப் பவன்களுக்கும் இணைப்பை வழங்கும், இதன் மூலம் இந்தப் பகுதியில் உள்ள அலுவலக ஊழியர்களுக்கும் வருகை தருவோருக்கும் அவர்களின் அலுவலக வாசலிலேயே போக்குவரத்து வசதியை வழங்கும்.
இந்த இணைப்பு மூலம் தினசரி சுமார் 60,000 அலுவலக ஊழியர்களும் 2 லட்சம் அலுவலகத்திற்கு வருகை தருவோரும் பயனடைவார்கள். இந்த வழித்தடங்கள் மாசுபாட்டையும் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டையும் மேலும் குறைத்து, வாழ்வதற்கு எளிதான சூழலை மேம்படுத்தும்.
இன்று, தில்லி மெட்ரோ ஒரு நாளைக்கு சராசரியாக 65 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்கிறது. இதுவரை பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கை 2025 ஆகஸ்ட் 08 அன்று 81.87 லட்சம் ஆகும்.
எம்ஆர்டிஎஸ்-இன் முக்கிய அளவுகோல்களான நேரந்தவறாமை, நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கி, தில்லி மெட்ரோ நகரத்தின் உயிர்நாடியாக மாறியுள்ளது.
தற்போது, தில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் சுமார் 395 கி.மீ நீளம் மற்றும் 289 நிலையங்களைக் கொண்ட மொத்தம் 12 மெட்ரோ வழித்தடங்களை தில்லி மெட்ரோ ரயில் கழகம் இயக்குகிறது.
இன்று, தில்லி மெட்ரோ இந்தியாவில் மிகப்பெரிய மெட்ரோ வலையமைப்பைக் கொண்டுள்ளதுடன், உலகின் மிகப்பெரிய மெட்ரோக்களில் ஒன்றாகவும் திகழ்கிறது குறிப்பிடத்தக்கது.


0 Comments