சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த சில ஆண்டுகளாக மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறைகள் இணைந்து பல கட்டங்களாக அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த அகழாய்வுகளில் பண்டைய தமிழர்களின் குடியிருப்புகள், கட்டிட அமைப்புகள், கருவிகள், மண்பாண்டங்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட பல முக்கிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த ஆய்வுகள் தமிழர் நாகரிகம் மிகப் பழமையானதும், முன்னேறிய நகர்ப்புற வாழ்க்கை முறையுடனும் இருந்ததற்கான உறுதியான ஆதாரங்களை வெளிக்கொண்டு வந்தன.
இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அகழாய்வு நடைபெற்ற பகுதிகளை அப்படியே பாதுகாத்து பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது.
கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 67,348 சதுர அடி பரப்பளவில் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று திறக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற கீழடியில் அகழாய்வுகளின்போது, கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.


0 Comments