நாடாளுமன்ற மாநிலங்களவையின் துணைத்தலைவராக இருந்த ஹரிவன்ஷ் நாராயண் சிங்கின் எம்.பி. பதவிக்காலம் ஏப்ரல் 9-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து அவரை நியமன உறுப்பினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார்.
அவரது பத்திரிகைத்துறை பணியை பாராட்டி இந்த நியமனம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹரிவன்ஷ் மீண்டும் எம்.பி.யாக பதவியேற்றார்.
முன்னதாக இவரது பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, மாநிலங்களவை துணைத்தலைவர் பதவியும் காலியானது. அந்த பதவிக்கு விதிமுறைப்படி இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடத்தப்பட்டது.
துணைத் தலைவர் பதவிக்கு ஹரிவன்ஷ் நாராயண் சிங் பெயரை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக முன்மொழிந்தது. அதன்படி அவர் மீண்டும் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தேர்தலுக்கான முன்மொழிவு அறிவிப்புகளை பெறுவதற்கான கடைசி நாள் மற்றும் நேரம் நேற்று பகல் 12 மணிக்கு முடிவடைந்தது. துணைத் தலைவராக ஹரிவன்ஷை தேர்ந்தெடுப்பதற்கு ஆதரவாக ஐந்து முன்மொழிவு அறிவிப்புகள் பெறப்பட்டன.
எதிர்க்கட்சிகளிடம் இருந்து எந்த அறிவிப்பும் பெறப்படவில்லை. இதனால் ஹரிவன்ஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் 3-வது முறையாக மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


0 Comments