தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் (58), இவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் போலீஸாரின் விசாரணையின் போது உயிரிழந்தனர்.
இதுதொடா்பாக அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், பால்துரை, காவலா்கள் முருகன், முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் உதவி ஆய்வாளர் பால்துரை உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, அவா் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 9 பேரும் சிறையில் உள்ளனர்.
இந்த வழக்கில் சிபிஐ தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை எனவும், குற்றஞ்சாட்டபட்ட காவலர்கள் அனைவரும் குற்றவாளிகள் எனவும் மதுரை மாவட்ட நீதிமன்றம் கடந்த மாதம் 23- ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட அப்போதைய காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்ளிட்ட 9 பேரும் நீதிபதி முன் முன்னிலையாகினர்.
ஒவ்வொருவரிடமும் தனித் தனியாக அவர்களின் குடும்ப விவரங்கள், கல்வி, சொத்து உள்ளிட்ட விவரங்களை நீதிபதி கேட்டடார். 9 பேரும் விளக்கம் அளித்ததுடன், தங்களது தரப்பு கோரிக்கைகளையும் நீதிபதியிடம் எடுத்துக் கூறினர்.
குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும். அரிதான காவல் நிலைய கொடூர வழக்குகளில் மரண தண்டனை வழங்கலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டதாக தெரிவித்து, சிபிஐ தரப்பு வழக்குரைஞர் விஜயன் முன்னிலையாகி தன்னுடைய வாதத்தை முன்வைத்தார்.
இந்த நிலையில், இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி 9 பேருக்கும் மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.


0 Comments