மியான்மரில், கடந்த 2021 ஆம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் ஜனநாயக அரசைக் கலைத்து தளபதி மின் ஆங் லாய்ங் தலைமையில் ராணுவம் ஆட்சி அமைத்தது. இதையடுத்து, ராணுவ அரசால் நடத்தப்பட்ட தேர்தலில் புதியதாக 584 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தேர்தல், ராணுவ அரசை ஆட்சியில் தக்கவைத்துக் கொள்வதற்காக நடத்தப்பட்டதாகவும், வாக்குப் பதிவுகள் சுதந்திரமாக ஜனநாயக முறைப்படி நடத்தப்படவில்லை எனவும் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த நிலையில், மியான்மரின் புதிய அதிபர் பதவிக்கு ராணுவ அரசின் தலைவர் மின் ஆங் லாய்ங் உள்பட 3 பேர் போட்டியிட்டனர். இதில், மின் ஆங் லாய்ங் மொத்தமுள்ள 584 வாக்குகளில் 429 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளதாக, அந்நாட்டின் நாடாளுமன்ற அவைத் தலைவர் ஆங் லின் ட்வே வெள்ளிக்கிழமை (ஏப். 2) அன்று அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மின் ஆங் லாய்ங் மியான்மர் நாட்டின் புதிய அதிபராகவும், அவருடன் போட்டியிட்டு தோல்வியடைந்த இருவர் துணை அதிபர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, மியான்மரின் அரசியலமைப்பில் அந்நாட்டின் அதிபர் முப்படைகளின் தளபதியாகப் பதவி வகிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், மின் ஆங் லாய்ங் தனது ராணுவத் தளபதி பதவியை ராஜிநாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments