இராக்கில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று 5 மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், எந்தவொரு அரசியல் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் முதல் கூட்டத்தொடர் கூடிய 30 நாள்களுக்குள் அந்நாட்டின் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டாக வேண்டும்.
இந்நிலையில், அதிபரைத் தேர்ந்தெடுக்க அந்நாட்டின் அரசமைப்பால் வரையறுக்கப்பட்டுள்ள காலக்கெடு கடந்தும் இரண்டு மாதங்களுக்குப் பின் சனிக்கிழமை (ஏப். 11) வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதில், எந்தவொரு வேட்பாளரும் பெரும்பான்மைக்குத் தேவைப்படும் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெறத் தவறினர். அவர்களுள் அமிதி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட 15 வேட்பாளர்களைவிட அதிக முன்னிலை வகித்தார். அவர் முதல் சுற்று தேர்தலில் 208 வாக்குகளையும், இரண்டாம் சுற்று தேர்தலில் 227 வாக்குகளையும் பெற்று முன்னிலையைத் தக்க வைத்துக் கொண்டார்.
இராக் பாரம்பரியத்தின்படி, அதிபராக குர்தீஷ், அதிகாரமிக்க பதவியான பிரதமராக ஷித் மற்றும் நாடாளுமன்ற தலைவராக சன்னி இனத்தவரும் இருக்க வேண்டும்.
இந்நிலையில், இராக்கின் டூஹக் மாகாணத்தைப் பூர்விகமாகக் கொண்ட ஒரு பொறியாளரா அமிதி, குர்தீஷ் தேசப் பற்றாளர்கள் சங்கம் கட்சியின் உறுப்பினரும் முக்கிய தலைவருமாவார். முன்னதாக, கடந்த காலங்களில் அவர் முன்னாள் அதிபர்கள் ஜலால் தலபாணி மற்றும் ஃபௌஹாத் மசூம் ஆகியோருக்கு மிக நெருக்கமாக இருந்தவரும்கூட

0 Comments