ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஸ்லோவாக்கியாவுக்கு ஒரு வார கால அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். இந்தப் பயணத்தின் முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகருக்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் அதிபர் இமானுவல் மேக்ரானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து, ஸ்லோவாக்கியா நாட்டுக்கு பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றார். இதன்மூலம் 1993-இல் ஸ்லோவாக்கியா விடுதலை பெற்ற பிறகு, அந்நாட்டுக்குச் சென்ற முதல் இந்திய பிரதமர் என்னும் பெருமையைப் பெற்றார்.
ஏற்கெனவே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்லோவாக்கியாவுக்கு சென்றிருந்தார். இதையடுத்து, ஸ்லோவாக்கியா அதிபர் பீட்டர் பெல்லர்ஜினி, தில்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஏஐ தொழில்நுட்ப மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைநகர் பிராடிஸ்லாவாவில் பிரதமர் மோடி, ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோவை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகள் இடையேயும் குடியேற்றம், எண்மத் தொழில்நுட்பம், பாதுகாப்பு, உயர்கல்வி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாக 11 முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
இந்தியா - ஸ்லோவாக்கியா இடையே பொருளாதார தொடர்பை அதிகரிக்க, இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் அமல்படுத்துவது தொடர்பான பணிகளில் இணைந்து செயல்பட தலைவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டனர்.
எரிசக்தி பாதுகாப்பை ஊக்குவிக்கும் வகையில், இரு நாடுகள் இடையே எரிசக்தி துறையில் நிலவும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், ஸ்லோவாக்கியாவில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் இந்தியாவில் பணிபுரியும் ஸ்லோவாக்கியா தொழிலாளர்களின் நலன்கள், சமூகப் பாதுகாப்பை காப்பதற்குத் தேவையான பங்களிப்பு அளிக்க சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்யவும் பிரதமர் மோடியும், ராபர்ட் ஃபிகோவும் ஒப்புக்கொண்டனர்.


0 Comments