உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், வருணா நதிக்கரையையொட்டி என்எச் 31 வாரணாசி வட்டச்சாலையை இணைக்கும் 43.218 கிமீ தொலைவிலான வழித்தடம் அமைப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்தது.
இந்தத் திட்டம் வளைவுப் பாதைகள், மேம்பாலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய முக்கியமான 6 / 4 உயர்த்தப்பட்ட வழித்தட திட்டமாகும். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால், அரசு மற்றும் தனியார் கூட்டாண்மை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தின் மூலதனச் செலவு ரூ.10,998.32 கோடியாகும்.
இதில் கட்டுமானப் பணிகளுக்கான செலவு ரூ.4,565.33 கோடியாகவும், நிலக் கையகப்படுத்துதலுக்கான செலவு ரூ.934.91 கோடியாகவும் இருக்கும்.
இந்த வழித்தடம் வாரணாசியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான முக்கிய திட்டமாகும். இது என்எச் 31 - காசி ரயில் நிலையம் இடையே தடையற்ற போக்குவரத்தை ஏற்படுத்துவதோடு வாரணாசி வட்டச்சாலை, வாரணாசி விமான நிலையம், காசி ரயில் நிலையம், வாரணாசி நகர ரயில் நிலையம், வாரணாசி சந்திப்பு, தீன்தயாள் உபாத்யாயா சந்திப்பு, ராம்நகர் துறைமுகம், சம்பூர்ணானந்த் சமஸ்கிருத பல்கலைக்கழகம், வாரணாசி படித்துறை, சந்தௌலி பிராந்தியத்தையொட்டிய பகுதிகளுக்குச் செல்வதற்கு போக்குவரத்து வசதியை எளிமைப்படுத்தும்.


0 Comments