தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மேற்கொண்டு வரும் அகழாய்வில், சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககாலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டுமானத்துடன் கூடிய சதுர வடிவ படிக்கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த 1930-ஆம் ஆண்டு இப்பகுதியில் ஆங்கிலேய அதிகாரியால் ரோமானிய தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.
மேலும், மதுரையிலிருந்து செங்கோட்டை கணவாய் வழியாக மேற்குக் கடற்கரைக்குச் சென்ற பண்டைய வர்த்தகப் பாதையில் இந்தப் பகுதி அமைந்திருந்ததால், சங்ககாலத்தில் இது முக்கிய வணிகத் தளமாக விளங்கியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அகழாய்வில் இதுவரை வாழ்விடப் பகுதியும், ஈமப்பகுதியும் கண்டறியப்பட்டுள்ளன. வாழ்விடப் பகுதியில் மொத்தம் 16 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு பல்வேறு தொல்லியல் சான்றுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
இங்கு கண்டெடுக்கப்பட்ட செங்கல் கட்டுமானம், கீழடி, அரிக்கமேடு, பட்டறைபெரும்புதூர், காவேரிப்பூம்பட்டினம், அழகன்குளம் உள்ளிட்ட முக்கிய சங்ககால அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட செங்கற்களின் அளவு மற்றும் அமைப்புடன் ஒத்துப்போகின்றன.
இதன் அடிப்படையில் இந்தக் கட்டமைப்பு சங்ககாலத்தைச் சேர்ந்ததாக தமிழக தொல்லியல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அகழாய்வின்போது 40 செ.மீ. நீளம், 20 செ.மீ. அகலம், 7 செ.மீ. கனமுடைய செங்கற்களால் கட்டப்பட்ட அமைப்புடன், கல்லால் அமைக்கப்பட்ட படிக்கட்டுகளைக் கொண்ட 4 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்ட சதுர வடிவ படிக்கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிணற்றிற்குள் இறங்க கற்களால் அமைக்கப்பட்ட படிகள் அமைக்கப்பட்டுள்ளன. கிணற்றின் சுவர்கள் செங்கற்களாலும், படிக்கட்டுகள் கற்களாலும் அமைக்கப்பட்டிருப்பது அக்கால கட்டுமானத் திறமையை வெளிப்படுத்துகிறது.


0 Comments