கடந்த திமுக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் தமிழில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என கடந்த ஜூன், 2025 அன்று உத்தரவிட்டிருந்தது.
அந்த உத்தரவில் தமிழில் பெயர் பலகை கட்டாயம் இடம் பெற வேண்டும் என்றும் தமிழ் பெயருக்கு கீழே ஆங்கிலத்தில் வேணடுமானால் பெயர் வைத்துக்கொள்ளலாம் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. தவறும் பட்சத்தில் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் உள்ள இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
அதில், உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட வணிகச் சின்னங்களின் அடிப்படையில் பெயர் பலகைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவற்றை மாற்றும் பட்சத்தில் அது வாடிக்கையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அரசு உத்தரவை அமல்படுத்த தயாராக உள்ளபோதும், நிதி உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக அவற்றை மாற்ற இயலாது என்பதால் பெயர்ப்பலகைகளை மாற்ற கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரி சென்னை மாநகராட்சிக்கும் தமிழக அரசுக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததது. இது தொடர்பாக ஆஜரான வழக்கறிஞர் தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த தயாராக இருக்கிறோம், அதற்கு 3 மாத கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு செப்டம்பர் 5, 2026 சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கே.சுரேந்தர், கடைசி வாய்ப்பாக நவம்பர் 1-ஆம் தேதிக்குள், கடைகளின் பெயர் பலகைகளை தமிழில் மாற்ற வேண்டும் எனவும், தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.


0 Comments